søndag 4. februar 2018

ஊரின் மாக்கியவல்லிகளுக்கு ....

ஊரின் மாக்கியவல்லிகளுக்கு .... by  John Belkan Fernando 
யார் இவர்கள்....
அம்மா, அப்பா, சகோதரர்கள், குடும்பம், பிள்ளைகள் இல்லாதவர்களா?
நண்பர்களுடன் சேர்த்து நேரத்தை செலவழிக்க வழியில்லாமல் உள்ளனரா?
பாடசாலையின் படிப்புச் சுமையை தாங்காமல் இங்கு வந்து குந்தியுள்ளனரா?
வீட்டில் ஏசிக் காற்று இருந்தும் வெயில் புழுக்கத்தில் ஓய்வெடுக்க வந்துள்ளனரா?
வீட்டுக்கு கறி மீன் வாங்கிக் குடுக்க நேரமில்லை, ஆனால் சோத்துப் பார்சல் வாங்கி குடுக்க வந்துள்ளனரா?
உழைக்க ஆயிரம் வழிகள் உள்ள உலகில் காசை இலவசமாக வாரி இறைக்க இவர்களுக்கு என்ன தலை விதியா?
ஒவ்வொருத்தர் வீடு வீடாக சென்று வாங்க வாங்க என்று கூப்பிட வேண்டும் என்பது இவர்களுக்கு தேவையா?
அதிகாரிகளின் ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பது இவர்களுக்கு அவசியமா?
யார் இவர்கள்.......
வீட்டில் இறால் கறி இருந்தும் உப்புச் சப்பில்லா கடைச் சாப்பாட்டை ஏன் இவர்கள் சாப்பிட வேண்டும்!
பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இருந்தும் ஸ்டேடியமே கதி என்று ஏன் இவர்கள் இருக்க வேண்டும்!
பகட்டு ஆடைகள் ஆயிரம் இருக்க ஏன் இவர் புழுக்க ஆடையில் உலாவர வேண்டும்!
சந்தோசமாய் கழிக்க ஆயிரம் வழி இருந்தும், பயிற்சி பயிற்சி என்று ஏன் இவர்கள் அலைய வேண்டும்!
ஊரில் ஆயிரம் பணிகள் இருந்தும் ஒவ்வொரு நொடியும் மைதானமே கதி என ஏன் இவர்கள் கிடக்க வேண்டும்!
ஆம் இவை
எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் ஊர்ப் பற்று...
பேசாலை எனும் தாய் மண் பற்று.
இன்று ஊரின் உத்தம புத்திரர்கள் எனும் மார் தட்டுபவர்களே!
எங்களை விஞ்ஞ இங்கு யாரும் இல்லை என்று கூவும் சாணக்கியர்களே!
வதனப் புத்தகத்தையில் வாக்கியப் போர் தொடுக்கும் மாக்கிய வல்லிகளே!
ஊரின் இயல் அறியாது அரசின் இயலை வசைபாடும் வானவராயன்களே!
ஒற்றைக் கேள்வி தொடுக்கிறேன்,
மனச் சான்றில் நின்று பதில் கூறுங்கள்.
மன்னார் மாவட்டத்தில் எமது ஊரின் பெயரை நிலை நிறுத்த ஒரு கூட்டம் நாயாய் பாடுபடுவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
விளையாட்டில் கடந்த 15 வருடமாக மன்னார் பிரதேச சபை மட்டத்தில் அனைத்து துறைகளிலும் சம்பியன்ஸ் பட்டம் வென்று வரும் எம் ஊர் அணிக்கு நிரந்தரமாக ஒரு சீருடை இல்லை என்பது உங்களில் ஒருவருக்காகவது தெரியுமா?
அங்கே விளையாடும் ஒவ்வொரு அணிக்காகவும் ஒரு கிராமமமே திரண்டு வரும் போது மாபெரும் பேசாலை பதியில் இருந்து உற்சாகக் குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லை என்பது கொஞ்சமாவது அறிவீரா?
விக்டறீஸ் என்ற பெயரை நிலை நாட்ட தன் சொந்த காசில் உணவுகளை வாங்கி கொடுத்து விட்டு தான் பட்டினியாய் கிடக்கும் எம் மண்ணில் மைந்தர்கள் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு போட்டியில் பின்னடைவு என்றால் அழுது புலம்பும் எம் ஊர்ப் பற்றுள்ள அந்த குழந்தைகள் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
வீண் கதைகளில் நேரம் கழித்து, செல்பிக்களிலே வாழ்க்கையை தொலைத்து, கருவே இல்லாத கருத்தை கொண்டு கானலில் கனவுக் கோட்டை கட்டும் உம் கற்பனைகளை மூட்டை கட்டிக் கொள்ளுங்கள்!
ஊருக்காக எழுதாத உங்கள் பேனாக்கள், பேருக்காக உருகுவதைப் பார்க்கையில் தான் ஊரான் என்ற வகையில் உள்ளம் வலிக்கிறது.....

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...