tirsdag 20. februar 2018

தானாய் விரையும் கால்கள்.....!

தானாய் விரையும் கால்கள்.....!

கருக்குவாச்சி காட்டுக்குள் 
பொடி நடை போகிறேன்.!
செயலிழந்த துணைக்கோள் 

மட்டும் கூட வருகிறது..!
அந்தி பூத்த நேரமிது
குங்குமம் தூவிய வானம்
என் முகத்தில் சற்று
வர்ணக் கலவை பூசி இருந்தது..!

என்னுடன் கவி புணைய
கற்பனைக் கோலும்
எண்ணத்தாள்கள்
மட்டுமே இருக்கின்றன..!
இடுப் பொடிந்த
இலைச் சருகுகள்
என் பாதக் காவலன்!
குவளைத் தண்ணீராய்
தெளிந்த நீரோடையில்
கால் பதிக்கிறேன்.!
அறிவிப்பின்றி குளிர்மை
என் கால்களை கற்பழிக்க
விறைத்த தேகத்தோடு
இன்பச் சுகத்தில் மிதக்கிறேன்.!

இயற்கை மனிதனைப் புனருகையில் இத்தனை சுகங்களா ?
சுதாகரித்துக் கரை சேர்கிறேன்!

எங்கோ கேட்ட ராகம் ஒன்று
செவிப்பறையை உரச
தனிமை உணர்வில்,
இனிமை பூசி இசையை ரசிக்கிறேன்!
குயிலின் குருநாதத்தில்
குருவி இசைச் சமர் செய்வதை
நான் கேட்கிறேன்!
ஓசைக் காற்றின் ஒய்யாரங்களைச் சுவைக்காதவன்
வாழ்ந்தென்ன பயன் ?
என மனதுள் மனிதத்தைக்
கடிந்து கொள்கிறேன்.!

மூச்சிழுத்துப் பார்க்கிறேன்
நுரையீரல் வரை
ஈரக்காற்று போய் வருகிறது.!
எண்ண அலைகளில்
ஏதோ ஒரு தித்திப்பு!

சிற்சில விலங்குகளின் நடமாட்டம்
கண்ணில் தென்படுகிறது!
அந்த மான் கூட்டம் சாந்தமாய்
ஊர்வலம் நடத்துவது ஏனோ?
பதாதைகளும், இரைச்சலும்
இல்லாத பேரணிகள்
இப்படித்தான் இருக்குமோ?
சந்தேகக் கேள்விகளை
உள்ளுக்குள் தொடுக்கிறேன்.!
பகுத்தறிவு இல்லாத மனிதன்
நன்றாய் இருந்திருப்பானோ?
கேள்விக் கணைகளுடன்
மெல்ல நகர்கிறேன்!

அந்த மலை முகடுகளில்
மேகப் பாய்களை
விரித்து வைத்தது யார்?
காற்று கூட மலையின் அடியில்
கட்டி வைக்கப்பட்டுள்ளதா?
என வினவுகிறேன்!
மேகத்தை மோகம் கொள்ள
காற்றுக்குத் தடை போட்டவனை
சுற்றிலும் தேடுகிறேன்!
பதில் கிட்டாத கோவத்தில்,
சாயம் போன மேகங்களுக்கு
விடுமுறை தான் இல்லையோ?
என இயற்கையை
கடிந்து கொள்கிறேன்.!

சல சலத்த ஓடை வழி,
அதன் தாய் குளத்தை அடைகிறேன்.!
பசுமைத் தொட்டியில்
மேகம் தண்ணீர் இறைத்து
மூன்று நாள் தான் ஆகிறது,
புது தேகத்தில்
சூரியக் கதிர் உடை அணிந்து
நிசப்தப் பொய்கையாய்
நீர்த்தாய் காட்சி தருகிறாள்.!

மெல்லிசைக் காற்று
காதை உரச
சிந்தை இயற்கையை வைத்து
பிரம்மிப்புக் கோலம் தீட்டுவதை உணர்கிறேன்.!

என்னை யாரோ தொடுவதாய்
மெல்லத் திரும்புகிறேன்.!
தென்னை இலையின் கீற்று
குளத்தில் ஏதோ கிறுக்குகிறது.!
என்னை அறியாமல் அவ்விடம் விரைகிறேன்.!

பொன்னிறக் குளத்தில்
மேகங்கள் மட்டும்
முகம் நனைத்து நீராடுகிறது.!
காலப் பெருவெளியில் நாம்
தொட்டுணராத தருணங்களை
தனிமை தான் உணர்த்தும்,
இவற்றை குழம்பிய மனதுடன்
தெளிந்த ஓடையில் காண்கிறேன்.!

என் உஷ்ண தேகத்தை குளிர்விக்க 

இயற்கையால் மட்டுமே முடியும்
என முடிவுரை வரைகிறேன்!
வீட்டை நோக்கி விரைகிறேன்!
இப்போது துணைக்கோள்
துணிவு பெறுகிறது.!
வெளிச்சத்தை பிரசவிக்கிறது.!
காலம் வரும் காத்திரு என்ற
தத்துவத்தை
உள்வாங்கிக் கொள்கிறேன்!

மனதின் இருண்ட கேள்விகளுக்கு
தனிமை எப்படி விடை சொல்லிற்று
என்ற வியப்பில்
நடையைக் கட்டுகிறேன்.!

இப்போது என்னுள் மண்டிய முடிவிலிகளுக்கு
விடைகள் கிடைத்தாயிற்று!
விடியலைத் தேடி
கிழக்கு நோக்கி
வேகத்தைக் கூட்டுகிறேன்.!
இப்போது தானாய்
விரைகிறது என் கால்கள்....!


# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...