torsdag 1. februar 2018

கடலை உழுவோம் வாரீர் !

கடலை உழுவோம் வாரீர் !            கவிதையின் காதலன்.. 
நெய்தல் களத்தில் புதைவோம் வாரீர் ! 
உயிரைப் பிடித்து உவர்நீர் கிழித்து 
படகை செலுத்தும் நேரம், 
ஆழ் கடலை அளந்த மீன்கள் கூட்டம் 
வலையில் தவழ்ந்து ஆடும்.

வானம் பார்த்து வாடைக்காற்றில் 
மீனைத் தேடி ஓடும் எம் தோழர் கூட்டம்
 வாழ்வைப் பார்த்து நாவாய் கூடப் பாடும், 
தொழில் நேர்மை வாழ்த்துக் கூறும்.

கடல் மை இருட்டில் கணவாய் மை முகத்தில், 
கடமைகள் உளத்தில் என உனக்கெதிர்
 பதங்களை தனிச் சமரில் வென்றாயே ! 
சாளைக்கும் சூடைக்கும் குடை பிடித்து 
வெயிலில் காய்ந்தாயே!
நின் தொழில் பக்தியே எம்மவர் சக்தி 

மலையளவு மாசாவிலும், 
உன் மனமதின் மாதா பக்தி கடலதை வென்றிடுதே! 
நண்டின் கொடுக்காய் நறுக்கிடும்
 இடர்களில் சங்கெனும் துணிவால் நொறுக்கி நீ நின்றாயே, 
பல சகிப்புகளும் கொண்டாயே''

தொழில் நேர சுழற்காற்றில் 
தெப்பக் கடலினில் நுட்பத் தேரோட்டியே! 
வழியில் மால் பிய்ந்தால், வலைபொத்தி 
விரல் தைத்து மீன் பிடிப்பாய், 
புயல் கடுங்குளிர் நடுவிலும் கரை பிடிப்பாய்!

இழுவைப் படகின் பலகை சிராய்ப்பு கையைக் கிழிக்க, 
மாரோடு வலை அணைத்து அசராது 
உடல் வளைத்து மடி வலை பிடிப்பாயே! 
குரல்வளை உவர்பினில் 
மடி வலை மணத்தினில் பொதிசோறு உண்பாயே, 
பலரைக் கரை சேர்த்து நின்றாயே!

விண்ணின் உடுக்களும் 
கடலின் வடுக்களும் உன் அனுபவத்தோழன்
கரையை அளந்து கடலைப் பிளந்து
 கணிப்புகள் செய்வாய், நொடி தரித்திடும் 
வேளையில் சரித்திரம் வெல்வாய் !

கவிதையின் காதலன்..

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...