torsdag 10. mai 2018

காதல் புயல் கொண்டு தாக்கினால் ?

காதல் பிரிவில் ஒருமையாய் அலைந்த நாட்களில், சிந்தனை அலைகள் தாக்கி ஏற்படுத்திய வடுக்கள் கொண்டு வெறுப்பு வேதம் எழுதிய போது ...........
என்னைக் காதல் புயல் கொண்டு தாக்கினால்
வேரோடு சாயும்
மரமாவேன் என்றாயோ ? 
கடல் கடந்த காதல் யுகத்தை
கரையில் வீசி என்ன பயன் ?
வெட்டிய பனையில்
கள்ளைத் தோண்டும்
கன்னி உனக்கு
அனுபவப் புதிர்களில்
விடை தருகிறேன்.
உன் அழைப்பில் உருகிய நாட்கள்
கடந்தது பெண்ணே !
காவியத் தூதுகளின் கடதாசிகளைக்
கருக்கிக் குளிர் காய்ந்தாயே !
நான் தழல்களால் வேள்வி செய்து வாழ்கிறேன் என்செய்வாய்?
என் கட்டிளம் தேகத்தை
காதல் பசியால் வாடச் செய்தாயே !
என் உணவுக் கால்வாய்கள்
துறவு பூண்டு ஆகாரத்தை நிராகரிக்கும்,
என் செய்வாய் ?
கவிதைகள் புனைந்த பொழுதெல்லாம் வலிக்கும் வார்த்தைகளால்
என் வாக்கியங்களை உடைத்தாயே ! இலக்கணம் அருந்தி
திடகாத்திரத் தமிழ் வைத்துள்ளேன்
என் செய்வாய் ?
காத்திருக்கச் செய்து
வேதனைக் காற்றால்
என் முகத்தில் விசிறி அடித்தாயே !
துரோகத் தடிகளால் அடிபட்டு
மெருகேறி நிற்கிறேன்
என்செய்வாய் ?
ஊரார் வாயில் உலையிட்ட கரும்பாக்கி என்னை சக்கை பிளிந்தாயே!
புகழ் மழையை தித்திக்கும் சாறாக்கி நாவினிக்கச் செய்து விட்டேன் என்செய்வாய் ?
தலைவன் என்று சொல்லி
சிலையாக்கி சந்தியில் நிறுத்தினாயே!
நினைவுப் பொக்கிசமாய்
பாதுகாப்பு அரண் அமைத்து
நிலைக்கிறேன்
என் செய்வாய் ?
மான் விழிப்பார்வையால் மயக்கி
பாமரன் காதலை
மானபங்கம் செய்தாயே !
மின்னல் கீற்றிடம் பயிற்சி பெற்று பார்வைகளைப்
பிரித்து எதிர்கொள்கிறேன்
என் செய்வாய்?
பறவை எச்சமாய் என்னைக்
காணும் இடங்களில் எல்லாம்
கறை கொண்டு எறிந்தாயே !
அழுக்கேறிய உடையணிந்து
வலம் வருகிறேன்
என்செய்வாய்?
என்னைக் காதல் புயல் கொண்டு தாக்கினால்
வேரோடு சாயும் மரமாவேன்
என நினைத்தாயோ ?
# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...