søndag 1. juli 2018

கண்ணீர் துளிகள் மட்டும் ,,,,,கவிதையின் காதலன் பேசாலை 14 hrs ·


கண்ணீர் துளிகள் மட்டும் 

தூது போகும் காதல் தேசத்தில் என்னவளைத் 
தொலைக்கிறேன். 
என் நினைவுத் துகள்களை கோர்த்து 
நெஞ்சில் வழியும் வலிகளை ஊற்றி கண்ணீர் துளியாய் வார்த்து 
வானத்து அஞ்சலகத்தில் 
வைப்பில் இட்டு வருகிறேன் .

காற்று சுமந்து செல்லும்
அஞ்சல் பெட்டிகளில்
கண்ணீரின் கணம்
உடையாமல் உறைந்தே கிடக்கிறது !

கால் பிடித்து சொடுக்கெடுக்கையில் உதிர்ந்த புன்னகை ,
ஆரத்தழுவி முத்தமிடுகையில்
அவிழ்ந்து வீழ்ந்த நாணம்,
உதட்டை ருசிக்கையில்
மூச்சை மோகித்த
வெப்பக் காற்று என
நினைவுகளின் கருவூலத்தை
காவிச் செல்கிறது,
அக் காற்று அஞ்சல்!

நெடிய, வலிகள் சுமந்த பயணம் என்பதால் 
இளைப்பாறும் இடங்களில்
ஊடல் தருணங்களை நினைத்து
ஓய்வைக் கழிக்கிறது, நினைவுகள்!

நாட்டு எல்லைச் சுங்கச் சாவடியில்
எனது அஞ்சல் பெட்டி புறக்கணிக்கப்பட்டதாக
முத்திரை குத்தப்படுகிறது!

வறள் நிலக் காதல்,
மழையை கேட்டால்
இயற்கை என்ன கொடுக்கவா போகிறது! 
நிராகரிப்பு புதிதல்ல, என்ற நிலை
என்றோ மனதில் பிறந்து விட்டது!

திருப்பியனுப்பிய கடிதம்
என்னவளைச் சேர
மாற்று வழி தேடி
புறவழிச்சாலையின் முடிவிடத்தில்
தக்க சமயம் பார்த்து
காத்துக் கிடக்கிறது!

காதலர் பூங்காவை
எல்லையில் ஊடறுத்து
தற்கொலைப் பள்ளத்தாக்கைக் கடந்தால் 
சோதனைபுரியை அடையலாம்,
அதன் பின் என்னவளால்
வேதனைத் தீ அணையலாம் - என
சட்ட விரோத காதல் அஞ்சல்
கடத்தல்காரர் செவ்வியிட,
அகதியாய்
என்னவள் இதயம் தேடி
பயணிக்கிறது எனது நினைவு அஞ்சல்!

எல்லையில் நிசப்தம்!
முட்புதர் நடுவே எண்ண ஓட்டம்
என்னை கடத்திச் செல்கிறது!
என்னவள் குடிகொண்ட தேசத்தில்
யுத்த காண்டம்
ஈடேறிக் கொண்டிருப்பதாய்
அவசரத் தந்தி ஒன்று
என் நினைவுப் பெட்டகத்தை
உரசி செல்கிறது!

பதறியபடி போர்க்களத்தில்
என்னவளைத் தேடியலைகிறது ,
என் கண்ணீர் !
நினைவுச் செல்கள்
புற்றாய் அரித்ததில் பீடிக்கப்பட்டோரை
வதம் செய்யும் பட்டியலில் இணைத்து 
என்னவள் கொல்லப்படுகிறாள் !

கொலைக் கள ஒப்பாரிகளில் 
காதல் மணந்து 
என் கண்மணி கருகிட 
கழுகின் கால்களில் இரையாய் சாகிறேன்!

என் கண்ணீர் அஞ்சல் 
காற்றில் சாம்பலாகி 
கரைந்தே விடுகிறது!
அதற்குள் என்னை விட்டு பிரிந்த 
என் சீவன் அதைத் தாங்கிப் பிடித்து 
நொந்து கொள்கிறது.

# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...